Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI Jan 2013



அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை நந்தன தை (ஜனவரி - 2013)  விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு
2. புறபூஜையும் அகபூஜையும் - குருநாதர் அருளுரை ...
3. ஆத்திசூடி - குருநாதர் அருளுரை தொடர்

மகான் பட்டினத்தார் ஆசிநூல்:-

தொட்டேன் சுத்த சைவமுறையை
தொலைத்தேன் அசைவ வழிமுறையை
விட்டேன் லாகிரி மதுவகையை
என விளம்பி மன உறுதி கொண்டு

கொண்டுமே சித்தர் வழிபாட்டை
குடியதனில் குறையில்லா நன்கு
உண்டாக்கி தொடர வேணுமப்பா
உயர்குரு அரங்கரை கண்டு

கண்டுமே தீட்சை உபதேசம்
கலியுகத்தில் அடைந்து நன்கு
தொண்டு செய்து தொடரவே
தூய்மைப்படும் வாழ்வு வளம் காணும்
- மகான் பட்டினத்தார் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி , பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.

இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.

திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் - 94434 21935

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
ஓங்காரக்குடிலில் 20.03.1988 அன்று அருளிய
அருளுரை

புறபூஜையும் அகபூஜையும்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
- திருமந்திரம் - திருவடிப்பேறு - கவி எண் - 1598.

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்,

நம்முடைய சங்கம் பூஜா விதியைப் பற்றி சொல்லுகின்ற சங்கமாகும். எப்படி பூஜை செய்வது? எப்படி பூஜை செய்தால், நம்மை நாமே உயர்த்திக் கொள்ளலாமென்று சொல்வோம்.

இதற்கு முன்பு யோகநெறியைப் பற்றி பேசியிருக்கிறேன். மூச்சுக்காற்றைப் பற்றி மிகத் துல்லியமாக பேசியிருக்கிறேன். இதை கேட்கும்போது புரியும். ஆனால் பிறகு புரியாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆக இது அவ்வளவு கடினமான ஒன்று .

வாசியைப் பற்றியும், மூச்சுக்காற்றைப் பற்றியும் சென்ற முறை சுவடி பார்க்கும்போது குரு வணக்கம் பற்றி பேச கட்டளை வந்தது. ஆக அந்த கட்டளைக்கு பிறகு பக்தி நெறியையும், யோக நெறியையும் கலந்து பேசுவது நல்லது என்று கடந்த வாரம் முடிவெடுத்தோம்.

குரு வணக்கம் பற்றி பேசும்போது நம்மை விட மேலானவர்கள் தான் நமக்கு குருவாக இருக்க வேண்டும். அவர்களை உள்ளம் உருக பூஜிக்க வேண்டும்.
பூஜை என்பது இரண்டு வகைப்படும். ஒன்று அக பூஜை. மற்றொன்று புற பூஜை.
அக பூஜை என்பது உள்ளும் புறமும் உணர்ந்து செயல்படுவது. புற பூஜை என்பது சாதாரண மக்களும் செய்வது.

சிலபேர் மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம் போன்ற மலர்களை மலையளவு குவித்து, பூஜை செய்வார்கள். மேலும் மலையளவு நறுமணமுள்ள மரிக்கொழுந்தை வைத்தும் பூஜை செய்வார்கள். மரிக்கொழுந்து பூவல்ல. அது செடி. மரிக்கொழுந்து மல்லிகை பூவைவிட நறுமணம் வாய்ந்தது. அதை "புஷ்பராஜ்" என்று சொல்வார்கள்.

மலர்களிலே அரசன் எது என்று கேட்டால், அது மரிக்கொழுந்துதான். மரிக்கொழுந்து பச்சை நிறமாக இருக்கும். ஆனால் அது மலரல்ல.
ஆனால் எல்லா மலர்களிலும் உள்ள நறுமணத்தைவிட மரிக்கொழுந்தில் வாசனை அதிகமாக இருக்கும். ஆக இப்படி பூக்களை குவித்து வைத்து பூஜை செய்தாலும், எந்த பயனும் இல்லை என்கிறார் ஆசான் திருமூலதேவர்.

புனுகு பூனையிலிருந்தும், ஜவ்வாது பூனையிலிருந்தும் வெளியேறுகிற சுக்கிலம் திவ்ய மணமாக இருக்கும்.
மற்ற ஜீவராசிகளின் சுக்கிலம் துர்நாற்றமுடையது. ஆனால் புனுகு பூனை, ஜவ்வாது பூனை இவைகள் இரண்டின் சுக்கிலம் உலகத்திலேயே நறுமணமாக இருக்கும். வேறெந்த ஜீவராசிகளுக்கும் இது போன்று இருப்பதாக தெரியவில்லை. இந்த நறுமணம் வேறெந்த பொருளிலும் இருக்காது.

ஆக புனுகு பூனை வெளியிடுகின்ற சுக்கிலம் கழிவுப்பொருள். அது ஒரு திரவம். ஆனால் புனுகு பூனையினுடைய விந்து இந்த அளவு நறுமணமுள்ளதாக உள்ளது.

இதைப்பற்றி ஆராயும் போதும், இயற்கையைப் பற்றி ஆராயும்போதும் நான் அளவில்லாத மகிழ்ச்சி அடைவேன். அதேபோல் சந்தனக்கட்டை அரைத்து வைத்தும் பூஜை செய்வார்கள்.

ஆக புனுகு, ஜவ்வாது, சந்தனம், நல்ல நறுமணமுள்ள மலர்கள் போன்றவைகளை வைத்து பூஜை செய்தாலும் பயனில்லை என்று மகான் திருமூலர் சொல்வார்.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
- திருமந்திரம் - கிரியை - கவி எண் 1452.

இது யோகிகளுக்கு மட்டும்தான் புரியும். மற்றவர்களுக்கு பயன்படாது.

வானுறு மாமலர் - மலைபோன்று அளவுக்கு உயர்ந்த நறுமணமுள்ள மலர்களை கொட்டி, இட்டு வணங்கினும் - இட்டு பூஜை செய்தாலும், ஊனினை நீக்கி உணர்பவர்க்கல்லது, இதற்கு பொருள் கூறுவது என்பது மிகச்சிக்கலான ஒன்று. ஊனினை நீக்கி என்பது சிக்கல் நிறைந்த ஒன்று.

ஊனினை நீக்குவதற்கு யோகி என்ன செய்கிறார்? முதலில் நாம் செய்யும் பூஜை போன்றே செய்கிறார். எப்பொழுதெல்லாம் முடியுமோ? தன் மனதிற்கு தோன்றுமோ? அப்போதெல்லாம் பூஜை செய்கிறார். மேலும் கோவில் வழிபாடு செய்வது, தினமும் பூஜை செய்வது, நாமாவளி செய்வது, கண்கள் மூடி தியானம் செய்வது, இது போன்று ஆரம்பத்தில் யோகி இப்படியெல்லாம் செய்வார்.

இப்படி புறபூஜை செய்தால், உண்மைப் பொருளை அறிய முடியுமென்று ஆசான் சொல்வார். மேலும் இந்த புறபூஜையில் மட்டும் நின்று விடாதே என்பார். இந்த பூஜையாலும் இலாபம் உண்டு. ஆனால் இத்துடன் நின்றுவிடக் கூடாது என்பார் ஆசான்.
ஊனினை நீக்கக் கூடியது எது? எதெல்லாம் ஊனினை வளர்க்கக் கூடியது என்பதை அறிய வேண்டும். ஆக நாம் செய்கின்ற பூஜையெல்லாம் மன ஆறுதலைத்தான் கொடுக்கும்.

நமக்கு பல்வேறு துன்பங்கள் இருக்கலாம். பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை. குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. இப்படிப்பட்ட குறைகளெல்லாம் நீங்குவதற்கு ஆசான் அகத்தீசரிடம் கேட்க வேண்டும். எதைக் கேட்டாலும் ஆசான் அருள் செய்வார். ஆனால் நாம் செய்த வினைக்கேற்றார்போல் காலதாமதமாகும்.

ஆனால் நாங்களெல்லாம் ஆசானிடம் கேட்டால் உடனே நடக்கும். காரணம் எங்களுக்கும் ஆசானுக்கும் நெருக்கம் அதிகம். நான் நாற்பது ஆண்டு காலம் ஆசானை பூஜை செய்ததினால் நெருக்கம் அதிகம். ஆசானை கேட்டவுடன் காரியங்களெல்லாம் சித்திக்கும்.

நாம் ஞானிகளிடம் தொடர்பு கொண்டு, ஞானிகள் மூலமாகவே உண்மைப் பொருளை அறிந்து ஊனினை உருக்கக்கூடிய ஒன்றை அறிவோம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி என்பார் மகான் மாணிக்கவாசகர்.

ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது - நமக்கு காமத்தை உண்டாக்குகின்ற ஊனினை உருக்க வேண்டுமென்பதே இதற்கு பொருள். ஊனினை நீக்க உள்ளம் உருக உருக பூஜை செய்ய வேண்டும். இதை அகபூஜை என்றும், சூட்சும பூஜையென்றும் சொல்வார்கள்.

இப்படி உள்ளம் உருக பூஜை செய்யும்போது, பல கோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். அதற்குபிறகு அவர்களுக்கு உண்மைப் பொருளையும், ஊனை உருக்குவது பற்றியும் ஞானிகள் உணர்த்துவார்கள்.

இடதுபக்கம் போகின்ற சுவாசமெல்லாம் ஊனினை வளர்க்கக்கூடியது. இந்த உண்மையை நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். ஊன் என்பது உடம்பு. இந்த உடம்பை வளர்ப்பதற்காகவும், உடம்பு ஆக்கம் பெறுவதற்காகவும் நன்கு வாழ்வதற்காகவும் பூஜை செய்கிறோம்.

இந்த உடம்பைக் கொண்டே, மரணமில்லா பெருவாழ்வுக்குரிய மார்க்கத்தை அடைவதற்கும் பூஜை செய்ய வேண்டும்.

அடுத்து சொல்லப்போவது இரண்டாவது பூஜையாகிய சூட்சுமபூஜை. யோகி கீழ்நோக்கி போகின்ற காற்றை மேல்நோக்கி செல்லும்படி செய்கிறான். அப்படி மேலே நோக்கும்போது, நமக்கு தொடர்ந்து பிறவித் துன்பத்தை தரக்கூடிய நச்சுத்தன்மையான இந்த உடம்பை உருக்குகிறது.

தங்கத்தை சுடும்போது அதிலுள்ள மாசு நீங்குவதுபோல, யோகிகள் மூலக்கனலை எழுப்புகிறார்கள். இப்படி எழுந்த மூலக்கனலை கொண்டு நச்சுத்தன்மை, அறியாமை, மூடத்தன்மையை உண்டாக்குகின்ற உடம்பை உருக்குகிறார்கள். இப்படி செய்வதுதான் மேலான பூஜை.

எனவே புற பூஜையோடு நின்றுவிடக் கூடாது. அப்படி புறபூஜையோடு நின்றுவிட்டால், அடுத்து வருகின்ற வாய்ப்பை நீ இழந்துவிடுவாய். இதுதான் அறிவுரை.

எனவே ஊனினை உருக்க வேண்டும். ஊன் என்று சொல்லப்பட்ட உடம்பை, மூலக்கனலை எழுப்பி அந்த உடம்பை உருக்கினால் அன்றி, தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. நீ அருள் பெறலாம். ஆனால் அவன் பாதத்தைப் பற்ற முடியாது. ஆக பூஜை செய்து அருள் பெறலாம்.

ஆனால் ஆசான் பாதத்தைப் பற்றி இரண்டற கலக்க முடியாது. ஆசானும் நாமும், தலைவனும் நாமும், அகத்தீசரும் நாமும், கடவுளும் நாமும் இரண்டற கலப்பது என்பது ஊனினை உருக்கினால் அன்றி முடியாது. இந்த புற உடம்பைக் கொண்டு ஞானிகளை அணுக முடியாது.

நாம் செய்வதெல்லாம் புற பூஜை. மலர்களெல்லாம் இட்டு செய்வது புற பூஜை. அகபூஜை செய்வதற்கு ஆசான் துணை வேண்டும். இப்போது நாம் சூட்சும தேகத்தைப் பற்றி பேசுகிறோம்.

தேனமர் பூங்கழல் - அவனுடைய பாதம் இனிமை பொருந்தியது. பூங்கழல் என்பது மென்மையான பாதம். அவனுடைய பாதம் தேனினும் இனிமையானது. மலரினும் மென்மையானது. ஆனால் சேர ஒட்டாது. காரணம், இந்த உடம்பிலுள்ள நச்சுத்தன்மையை நீக்காமல், சேர முடியாதென்று ஆசான் சொன்னார்.
ஆக இதுபோன்று ஊனினை உருக்குவதற்கு உடம்பிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கினாலன்றி ஒருவருக்கு உள்ளுடம்பு மிகாது. புறஉடம்பாகிய மாசு நீங்காமல் உள்ளெழும் ஜோதி தோன்றாது.

ஜோதி தோன்றுவதற்கு என்ன செய்தார்கள்?
களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி என்றார். தங்கத்தில் இருக்கும் மாசு நீங்க, நெருப்பால் சுடுவது போல, உடல் மாசு நீங்குவதற்கு மூலக்கனலை எழுப்ப வேண்டுமென்று சொல்வார்கள்.

உடம்பில் களிம்பு என்பது உடம்பில் இருக்கும் மாசு. பாத்திரத்தில் இருக்கும் மாசை (அழுக்கை) புளி போட்டு துலக்குவது போலவும், தங்கத்தில் உள்ள மாசை, புடம் போட்டு எடுப்பது போலவும், ஞானிகள் தங்களுடைய தவ முயற்சியால், தங்கள் உடம்பில் இருக்கும் மாசு என்ற குற்றத்தை நீக்குகிறார்கள்.

அவர்கள் மும்மலம் அற்றவர்கள், உடம்பில் களிம்பற்றவர்கள். களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி என்றார். அவர் உடம்பில் இருக்கும் களிம்பை யார் துணைக் கொண்டு நீக்கிவிட்டார்? எல்லாம் வல்ல ஆசான் அகத்தீசரின் துணைகொண்டு நீக்கிவிட்டார்.

மகான் அகத்தீசருக்கு ஆசான் யார்? ஞானபண்டிதன் சுப்ரமணியர்தான் ஆசான்.
ஆசான் அகத்தீசருக்கும், எல்லா தலைவர்களுக்கும், ஞானிகளுக்கும் மகான் சுப்ரமணியர்தான் ஆசான்.

ஆசான் சுப்ரமணியர் மும்மலமற்றவர், களிம்பற்றவர். ஆசான் சுப்ரமணியரின் பாதத்தை உள்ளம் உருக பூஜித்ததன் காரணமாக, ஆசான் அகத்தீசருக்கு உடம்பில் இருந்த களிம்பு நீங்கியது. களிம்பு என்றால் மாசு, அழுக்கு.
நம்முடைய மெய்யுணர்வை தட்டி எழுப்புவதற்கு தடையாய் இருப்பது இந்த களிம்பு. அதை அறுத்தான் என்பார்.

களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
- திருமந்திரம் - உபதேசம் - கவி எண் 114.

நாம் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். பூஜையென்பது ஓரிரு நாட்கள் மட்டும் செய்வதல்ல. தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். மனஉளைச்சல் இருக்கும்போது யாராலும் பூஜை செய்ய முடியாது
வறுமையும், பிணியும், பகையும், பூசலும் இவைகளெல்லாம் ஒருவனை தாக்கும் போது அவன் எப்படி பூஜை செய்வான்?

எனவே இப்படி ஒரு நிலைமை வருவதற்கு முன்னே பூஜை செய்ய வேண்டும். ஆக அமைதி இருக்கும்போதே ஞானிகளை பூஜை செய்துகொள்ள வேண்டும்.
ஞானிகளை பூஜை செய்வது தொடர் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்படி தொடர்ந்து பூஜை செய்வதால் நமக்கு என்ன விளைவுகள் ஏற்படும். முதலில் பொல்லாத வறுமை தீரும். மனசாந்தம் உண்டாகும்.

ஒருவனுடைய மனது சாந்தமில்லாமல் இருப்பதே, மற்றவரை அணு அணுவாக சித்ரவதை செய்வதற்கு காரணமாகும்.
ஏதோ ஒரு வகையில் மனதில் சாந்தமிருக்காது. ஒன்று, சென்ற காலத்தைப்பற்றி, இல்லையென்றால் நிகழ்காலத்தைப் பற்றி அல்லது வருங்காலத்தைப் பற்றி, ஆக இந்த மூன்று வகையால்தான் மனதில் குறையிருக்கும்.

யோகிகள் நடப்பது நடக்கட்டும் என்றிருப்பார்கள். மனத்தெளிவுள்ள மக்கள், நடப்பது நடக்கட்டும். நாம் இதைக் கண்டு சோர்வடைந்தாலோ அல்லது பயந்தாலோ விடாது. நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணம் வந்தால், அவன் விஷயம் தெரிந்தவன் என்று அர்த்தம். அவனே சாந்தமுள்ளவனாக இருப்பான்.

ஆசான் ஆசி பெற்றவர்கள் வருங்காலத்தைப்பற்றியும், சென்ற காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். நடப்பது நடக்கட்டும் எப்படியும் ஆசான் அகத்தீசர் என்னைக் காப்பாற்றுவார், நிச்சயம் அவருடைய ஆசி எனக்கு உண்டு என்னும் திடமான அறிவு இருக்குமேயானால் அவன் எதற்கும் பயப்படமாட்டான்.

ஆனால் ஞானிகளின் ஆசி பெறாதவன், வருங்காலம் இப்படியாகுமோ, அப்படியாகுமோ என்ற கற்பனையில் உழன்று கிடப்பான்.
களிம்பறுத்தான் அருட்கண் விழிப்பித்து - நமக்கு உள்ளேயே இந்த தெளிவை தருகிறார்கள். அவனின்றி ஓர் அணுவும் அசையாதென்று எண்ணக்கூடிய எண்ணத்தை தருவார்கள்.

ஞானிகளெல்லாம் அசைவற்று இருப்பார்கள். அது மேலான நிலை. நாமே இந்த காரியத்தை நடத்துகிறோம். நம்மால்தான் இந்த காரியம் முடிந்ததென்று நினைத்து பல நல்ல காரியம் செய்யும் போது மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

அதே சமயத்தில் தீமையான காரியம் நடக்கும்போது சோர்வு வரும். எனவே நான் செய்கின்ற காரியத்தில் எனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கும், மகிழ்ச்சிக்கும் ஆசானாகிய நீங்களே காரணம், உங்களால் தான் இதை மாற்ற முடியும், உங்களால் தான் இதை நடத்தி வைக்க முடியுமென்று நினைக்கின்ற மக்கள் மன அமைதியை பெறுகிறார்கள்.

ஆக எல்லாவற்றிற்கும் ஆசான் அகத்தீசரை பூஜிக்க வேண்டும். இதற்கு ஊனினை உருக்க வேண்டிய அவசியமில்லை. பிறவித் துன்பத்தை ஒழிப்பதற்குதான் ஊனினை ஒழிக்க வேண்டும். ஊன் என்பது புற உடம்பு. நமக்கு இரண்டு உடம்பு உண்டு.

மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரந்
திண்ணென் றிருந்தது தீயினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணாவபோல்
எண்ணின்ற மாந்தர் இறக்கின்ற வாறே.
- திருமந்திரம் - யாக்கைநிலையாமை - கவிஎண் 143.

இந்த பாடலின் சூட்சுமத்தை ஆசான் திருமூலதேவர் ஆசி பெற்றால் அறிந்துகொள்ளலாம்.

மண்ணொன்று கண்டீர் - புற உடம்பு.
இருவினை பாத்திரம் - புற உடம்பு, அக உடம்பு.

ஆக அக உடம்பு கண்களுக்கு புலப்படாது. இது சூட்சும தேகம்.

புற உடம்பு என்பது கண்களுக்கு புலப்படக்கூடிய ஒன்று, அது காமத்தை உண்டாக்கக்கூடியது, நரை, திரை, மூப்பு, இறப்பை உண்டாக்குவதற்கு காரணமாக இருக்கும், இந்த உடம்பு அநித்தியமானது.

அகஉடம்பு யௌவன பருவமாக என்றும் இருக்கும். அது கண்களுக்கு புலப்படாது, என்றும் ஒரே தன்மையாக இருக்கும்.

களிம்பறுத்தான் அருட்கண் விழிப்பித்து - அவன் களிம்பறுத்தவன். உடல் மாசை நீக்கியவன். உடல் மாசு நீங்கினாலன்றி மனமாசு நீங்காது. மனமாசு நீங்கினாலன்றி உண்மைப் பொருள் தெரியாது. உண்மைப் பொருள் தெரியாவிட்டால், நிச்சயமாக வாசி நெறியைப் பற்றியும், ஆறாதார நிலையைப் பற்றியும் தெரியாது.

மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரந்
திண்ணென் றிருந்தது தீயினைச் சேர்ந்தது

இவனுக்கு எப்போது தீவினை சேர்ந்தது. பிறவித் துன்பத்தைப் பற்றி அறிந்து, ஆராய்ந்து நீக்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் மனிதனுக்குத்தான் உண்டு. மற்ற ஜீவராசிகள் இதைப்பற்றி சிந்திக்கவே முடியாது. மற்ற ஜீவராசிகளுக்கு இந்த தகுதியே கிடையாது.

மனிதனுக்கு மட்டும்தான் என்பதை, மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரம் என்றார். மண் ஒன்றுதான். மண்ணை பிடிப்பான், தனி மண்ணை உருண்டை செய்ய முடியாது. அதற்கு நீர் கலக்க வேண்டும்.
நாதவிந்து சேர்க்க வேண்டும். அப்பொழுது ஆண் - மண், பெண் - நீர். ஆக இந்த இரண்டும் சேர்ந்துதான் உயிர் உருவாகும்.
ஆக ஒரே மண்தான். இரண்டு வகை பாத்திரம் மண்ணால் செய்யப்படுகிறது என்றார்.

பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.
- திருமந்திரம் - யாக்கை நிலையாமை - கவி எண் 144.

பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால் - இந்த உடம்பை கூரை வீடென்றும், மண் பாண்டம் என்றும் சொல்லியிருக்கிறார்.

என்னதான் சிறப்பாக வைக்கோல் அல்லது தட்டை கொண்டு வேய்ந்தாலும் அந்தக் கூரை பத்து பதினைந்து ஆண்டுகள் தான் இருக்கும். பிறகு மக்கிப்போகும். ஆக இந்த உடம்பை கூரை வீடு என்று சுட்டிக்காட்டியதன் நோக்கம், நாளுக்குநாள் இந்த உடம்பு வளர்ச்சியை காட்டாது. ஆனால் நாளுக்குநாள் இந்த உடம்பு மக்கிப்போகும்.
இங்கே மண்ணென்று சொல்லும்போது மீண்டும் மண்ணாவதற்கு முன்னே நீ முயற்சிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆக திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது, இந்த உடம்பை உறுதியென்று எண்ணியதால் தீவினை சேர்ந்தது. இந்த புற உடம்பு அநித்தியமானது. நிச்சயம் அழியக்கூடியது. நமக்கு பிறவித் துன்பம் உண்டு, எமபயம் உண்டு. எமன் நம்மைக் கொன்று விடுவானென்று நினைக்காமல், இந்த உடம்பு கடைசி வரைக்கும் உதவி செய்யுமென்று நினைத்து உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொண்டீர்கள். அதனால்தான் உங்களுக்கு தீமை வந்ததென்றார்.

ஞானிகள் இந்த உடம்பை முழுமையாக நம்பவில்லை. அதை இறுகப்பற்றவில்லை. இந்த உடம்பின் மேல் மயக்கமில்லை. இந்த உடம்பு அழியக்கூடிய அநித்தியமான உடம்பு. எப்படியாவது அதை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள். ஞானிகளின் தயவை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள்.

ஆசான் திருமூலதேவர், மகான் நந்தீசர், மகான் அகத்தீசர் இவர்களின் பாதத்தைப் பற்றி எப்படியாவது இந்த புறஉடம்பை காப்பாற்றி அகஉடம்பாகிய சூட்சும உடம்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். மரணமிலா பெருவாழ்வுக்குரிய மார்க்கத்தைப் பெற வேண்டுமென்று விடாமல் சிந்தித்தார்கள், சித்தி பெற்றார்கள்.

நாமென்ன செய்கிறோம். இந்த புறஉடம்பே பூரணமான பாதுகாப்பு தருமென்று நம்பி, ஏமாந்த காரணத்தாலே இந்த உடம்பு வீழ்ந்து போனது.

விண்ணின்று நீர் வீழின் மீண்டும் மண்ணானாற்போல - அது முன்னமே மண்ணாக இருந்தது. இந்த புற உடம்பு தண்ணீரும் மண்ணும் சேர்ந்த ஒரு பாத்திரம். நாதவிந்து சேர்ந்த ஒரு பாண்டம். ஆண் பெண் கூடி, அதனால் உண்டான பாத்திரம்.

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என்கண்ணம்மா உன்பாதஞ் சேரேனோ.
- மகான் அழுகண்ணிச்சித்தர் - கவி எண் 8.

மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் - ஆக மாற்றிப் பிறக்க மருந்து கிட்டும். அது இந்த உடம்பில் இருக்கிறதென்பதை கண்டறிந்தவர்கள் தான் ஞானிகளும் மகான்களும் ஆவார்கள். எனவே இந்த உடம்பு மீண்டும் மண்ணாவதற்கு முன்பே அவர்கள் முயற்சி செய்தார்கள். அந்த காரணத்திற்காகவே,

களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்துக்

என்றார். அருட்கண் விழிக்க வேண்டுமென்றால், நமது பார்வையில் அருள் இருக்கவேண்டும். ஒருவனை உருட்டிப் பார்த்தல், கடுமையாக பார்த்தல் இவையெல்லாம் அருட்பார்வையல்ல. அது மருட்பார்வை.

சாந்தமாக பார்க்க வேண்டும். இனிமையாக பேச வேண்டும். நாம் ஞானிகள் மீது எந்த அளவிற்கு அன்பு கொண்டு மனம் உருகுகின்றோமோ, அந்த அளவிற்கு ஞானிகளுக்கு நம்மீது கனிவு வரும், அன்பு வரும். இதை அருட்கண் விழித்து என்று சொல்லாமல், விழிப்பித்து என்று சொன்னார். அளவு கடந்து அன்பு செலுத்துவதை ஒருவனுடைய பார்வையாலேயே தெரிந்து கொள்ளலாம். கண்களிலிருந்து அருள் உண்டாகும். இதை ஆசான் திருவள்ளுவர்,

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
- திருக்குறள் - குறிப்பு அறிதல் - குறள் எண் 709.

ஒருவனைப் பார்க்கும்போதே அவனுடைய கண்களிலிருந்து அவன் நம்மேல் வெறுப்போடு இருக்கிறானா அல்லது நட்போடு இருக்கிறானா என்று தெரிந்து கொள்ளலாம். எனவே அருட்கண் விழிப்பித்து என்று சொல்லும்போது, நம்மீது அளவில்லாத அன்பு இருக்குமானால் ஞானிகளுடைய பார்வையில் கருணை இருக்கும்.

நாம் ஞானிகளின் மீது அன்பு கொண்டு உள்ளம் உருகினால், அவர்களுடைய உள்ளம் நம்பால் உருகும். உள்ளம் உருகினால், அவர்களுடைய பார்வையில் அருள் இருக்கும். அந்த அருள் புற உடம்பின் மாசை நீக்க பயன்படும்.

விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணாவபோல்
எண்ணின்ற மாந்தர் இறக்கின்ற வாறே.

எண்ணிலடங்கா மனிதர்கள் இந்த உடம்பை உறுதிப்படுத்திக் கொள்ளாததால் இறந்து விட்டார்கள். ஞானியர்கள் இந்த உடம்பை அநித்தியமானது, அழியக்கூடியதென்பதை அறிந்து கொண்டார்கள். தங்களது தவ முயற்சியாலும், தலைவனை உள்ளம் உருக பூஜித்த காரணத்தாலும் அழியக்கூடிய உடம்பை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். மரணமில்லா பெருவாழ்வுக்குரிய மார்க்கத்தை அறிந்து கொண்டார்கள்.

நாம் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கு சில விளக்கத்தை தந்து கொண்டிருக்கிறோம். நாம் அந்த நிலையை அடைந்திருக்கிறோம். அந்த வாய்ப்பு எங்களுக்கு உண்டு. நாம் புறஉடம்பைக் கொண்டு அகஉடம்பை பாதுகாத்துக் கொள்கிறோம்.

எங்களை அணு அணுவாக வஞ்சிக்கக் கூடிய காமத்தை , அறியாமையை, மூடத்தனத்தை உண்டாக்கக்கூடிய அறிவை உடைத்தெறிந்தோம். மேலும் அதே அறிவை நாளுக்குநாள் பயன்படுத்தி அரும்பாடுபட்டு உடம்பில் இருக்கும் மாசை நீக்கிக் கொண்டோம்.

புற உடம்பின் துணைகொண்டு அகஉடம்பை வளர்த்தோம். இன்னும் அக உடம்பை வளர்த்தோம், வளர்த்துக் கொண்டே இருக்கிறோம். வெற்றி பெறுவதற்காக தினம் பூஜை செய்து வருகிறோம். ஆக மீண்டும் மண்ணாகாமல் இருப்பதற்கு முயற்சி செய்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆற்றல் உண்டு.

புற உடம்பைக் கொண்டே, அக உடம்பை பாதுகாத்துக் கொள்கின்ற வாய்ப்பு உண்டு. தவமுயற்சியால் ஊனை உருக்க முடியும். அதற்கு உள்ளம் உருக பூஜிக்க வேண்டும். அப்படி உள்ளம் உருக பூஜித்தால் என்னாகும் என்பதை மகான் திருமூலர்,

மருவிப் பிரிவறி யாஎங்கள் மாநந்தி
உருவ நினைக்கநின் றுள்ளே யுருக்குங்
கருவிற் கரந்துள்ளங் காணவல் லார்க்கிங்
கருவினை கண்சோரும் அழிவார் அகத்தே .
- திருமந்திரம் - ஞானகுரு தரிசனம் - கவி எண் 2665.

ஞானிகளை உள்ளம் உருக பூசிக்க பூசிக்க நம்மோடு இரண்டற கலந்து விடுவார்கள்.
மருவிப் பிரிவறி யாஎங்கள் மாநந்தி - நம்மோடு கலந்து விட்டால் நிச்சயம் பிரிய மாட்டார்கள். ஆனால் கலக்க மாட்டார்கள். கலந்தால் நிச்சயம் நம்மை விட்டு பிரிய மாட்டார்கள். இப்படி கலப்பதற்கு நம்மீது எந்த அளவு கருணைக் காட்ட வேண்டும். இது மிகப்பெரிய கருணை.

இவையெல்லாம் ஒன்றும் கற்பனையல்ல. இராமாயணம், மகாபாரதம் போன்ற கற்பனைக் கதையுமல்ல. ஞானிகள் அத்தனை பேரும் தம்முடைய தவத்தால் ஏற்பட்ட அனுபவத்தை சொல்வார்கள்.

உருவ நினைக்கநின் றுள்ளே யுருக்குங் - உருகி நினைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை மகான் திருமூலர் கூறும் மற்றொரு கவியான களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி என்ற கவியில் பார்ப்போம்.

களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி - ஒருவனுக்கு புருவமத்தியில் தோன்றக்கூடிய ஜோதிதான் அவனுடைய களிம்பை அறுக்கக்கூடியது. இதை

களிம்பணுகாத கதிரொளி காட்டி என்பார். கதிரொளி என்பது சூரிய ஒளி, புருவமத்தியில் ஜோதி தோன்றும்.

ஆக களிம்பணுகாத கதிரொளி காட்டுவது யார்? எங்கேயோ இமயமலையில் இருக்கும் ஈசன் அல்ல. அவன் நம்முள் இருந்தே எழுகிறான். ஞானிகள் அவனை உள்ளம் உருக பூஜித்து இரண்டற கலந்து விடுகிறார்கள். இரண்டற கலந்து அவர்கள் காணுகின்ற அருட்பெருஞ்ஜோதியை புருவமத்தியில் தட்டி எழுப்புவார்கள். இதை மகான் திருமூலர்,

உற்றுநின் றாரோடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
- திருமந்திரம் - அன்பு செய்வாரை அறிவன் சிவன் - கவி எண் 284.

உற்றுநின்றாரோடு மத்தகு சோதியை - ஒருவனுக்கு ஜோதி தோன்றினால் அது இன்னொரு மகானின் அருட்கருணையினால்தான் முடியும். அவன் அந்த அளவுக்கு உள்ளம் உருக பூஜித்ததால் ஞானிகள் அவனுடன் இரண்டற கலந்து விடுவார்கள். அப்படி உள்ளம் உருக பூஜித்ததால் அவர்கள் கோடி சூரிய பிரகாசமாக புருவமத்தியில் தோன்றுவார்கள். இது எங்கள் அனுபவம், கற்பனையல்ல.

உற்று நின்றாரோடு மத்தகு சோதியை - இந்த ஜோதியை உண்டாக்கக் கூடியவர்கள் ஞானிகள் தான். அவருக்கு ஜோதியை உண்டாக்கியது அவருடைய ஆசான். அந்த ஆசானுக்கு ஜோதியை உண்டாக்கியது அவருடைய ஆசான்.

ஆக ஒருவர் ஜோதி காண்கிறார் என்றால், அது அவர்களுடைய ஆசானின் தயவுதான். சித்தர்களின் பாரம்பரியமே இப்படித்தான் இருக்கிறது.

உற்றுநின் றாரோடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார் இல்லை
இந்த ஜோதி தோன்றுவதற்கு சித்தர்கள் தான் காரணம். சித்தர்கள் மட்டும்தான் இந்த ஜோதியை காட்டமுடியும். அந்த ஆற்றல் அவர்களுக்குத்தான் உண்டு. இந்த உண்மைகளையெல்லாம் உலகத்தார் அறிந்து கொள்ள வேண்டும்.

பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பக்திமையாலே உள்ளம் உருக பூஜித்தாலன்றி ஜோதியை காட்ட மாட்டார்கள். ஜோதியை காட்டினால் புறஉடம்பு வீழ்ந்து அக உடம்பு தோன்றும் என்றார். உள்ளெழும் ஜோதியை தட்டி எழுப்பாவிட்டால், புறஉடம்பின் மாசு நீங்காது.

இந்த உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு கதை சொல்வார்கள். ஆசான் தட்சணாமூர்த்தி தவம் செய்து கொண்டிருந்தார். அவரை யாரும் நெருங்க முடியாது. மன்மதன் அவரைப் பார்க்கப் போகிறேனென்று மகான் நந்தீசரிடம் சொன்னான். மகான் நந்தீசர் நீ போகாதே, அப்படி நீ போனால் நிச்சயமாக உன்னை எரித்து விடுவார் என்றாராம். மன்மதன், ஆசான் நந்தீசர் கட்டளையை மீறி உள்ளே சென்று, ஆசான் தட்சணாமூர்த்தி மீது மன்மதன் பாணத்தை தொடுத்தான். அவர் கண்ணை விழித்தார். அப்படி கண் விழிக்கும்போதே மன்மதன் எரிந்துவிட்டான்.

ஆக இந்த கதையில் ஒரு உண்மை உள்ளது. நெற்றிக் கண்ணை சுழிமுனைக்கதவை திறந்தால் காமம் அற்றுப்போகும். மன்மதன் எரிந்துவிட்டான் என்பார்கள். இதை காமதகனம் என்றும் சொல்வார்கள்.

ஆக நெற்றிக்கண்ணாகிய சுழிமுனைக்கதவை திறந்தால், காமவிகாரம் அற்றுப்போகும். சுழிமுனைக் கதவு திறக்காத வரையிலும், காமம் மனிதனை வஞ்சிக்கத்தான் செய்யும். காமம் மனிதனை வஞ்சிக்கிறது என்பதற்காக அதைப்பற்றி சிந்திக்க தேவையில்லை. ஆனால் நாம் செய்ய வேண்டிய காரியத்தை நிச்சயமாக செய்ய வேண்டுமென்று பல்வேறு வகையாக சொல்வார்கள்.

மருவிப் பிரிவறி யாஎங்கள் மாநந்தி,
உருவ நினைக்க நின்றுள்ளே யுருக்கும் என்றும்

கருவில் கலந்து உள்ளம் காண வல்லார்க்கு
என்றும் சொல்வார்கள்.

கருவில் என்றால் நம்மோடு கலந்ததென்று அர்த்தம்.
கருவினை கண்சோரும் அழிவார் அகத்தே - வினை இப்படித்தான் வரும். பிறர் துன்பத்தை அறியவே முடியாது. தாய்தந்தை இவனை கண்ணும் கருத்துமாக வளர்த்திருப்பார்கள். அந்திமகாலத்தில் அவர்களுக்கு முதுமை வந்தபோது, அந்த நன்றி உணர்வோடு அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். ஆனால் வெகு மனிதர்கள் பாதுகாப்பு தராமல் பாவத்தை செய்கிறார்கள்.

ஒரு அன்பரை பார்த்தேன். மார்கழி தை மாதம், அப்போது பெய்யும் பனி மிகவும் கொடுமையானது. இவன் வீட்டின் முன்னே தாழ்வாரம் உள்ளது. அதன் மீது கீற்று கிடையாது. வெறும் மூங்கில் மட்டும்தான் இருக்கிறது. அவன் தன்னுடைய தாயை திண்ணையில் போட்டிருக்கிறான். அவனும், அவன் மனைவியும் வீட்டினுள்ளே திடமான போர்வையை போர்த்தி தூங்குகிறார்கள். அவனைப் பெற்றெடுத்தவள் திண்ணையிலே குளிரில் உதறிக் கொண்டு, அம்மா! அம்மா! குளிருதம்மா என்கிறாள். அந்த பெண் அப்படியே கிட சாகிற மட்டும் என்கிறாள். இதை நான் கண்டேன்.

ஆக ஒரு அறுபத்தைந்து வயது கிழவி. தாழ்வாரத்திலே போர்வை போர்த்திக் கொள்ளக்கூட இல்லாமல் குளிரில் நடுங்குகிறாளே! அவளுக்கு ஒரு போர்வை கொடுக்க வேண்டுமென்று நினைக்காத அறிவுதான் ஒருவனை கொடிய பாவியாக்கும். அப்படிப்பட்டவர்களெல்லாம் காட்டுமிராண்டிக்கோ, காண்டாமிருகத்திற்கோ பிறந்திருக்க வேண்டும். காண்டாமிருகத்திலிருந்து பிறந்தவர்களுக்குத்தான் இவ்வளவு ஒரு கொடிய மனமிருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஞானியர்கள் பாதத்தைப் பற்ற முடியாது.

தன்னை, கண்ணை இமை காப்பது போல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்த தாய்தந்தையர்களை, முதுமை வந்ததும் வெளியே தள்ளிவிட்டு உள்ளே படுத்து தூங்கும் இந்த கயவர்களுக்கு ஞானம் உண்டா? என்று விஷயம் தெரிந்தவர்கள் கேட்பார்கள்.

இவர்களுக்கும் ஞானியர்கள் அருள் செய்வார்கள் என்று சொல்வது என்ன நியாயம்? ஆக இவ்வளவு கொடிய மனம் உள்ள பாவிகளாக இருந்தாலும், அவர்களும் உள்ளம் உருகினால் உணரப்படுமென்றார்.

தினம் பூஜித்தால் உன்னுடைய கடின மனம்பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு .
கருவினை கண்சோரும் அழிவார் அகத்தே - ஆக இப்படி ஒவ்வொரு ஜென்மங்களிலும் உணர முடியாத ஒரு கடின மனம் இருக்கும். எனவே பாவத்திற்கு என்ன காரணம்?

மனைவி தன்னையே நம்பி வந்திருப்பாள். உன்னையே சதமாக நினைத்திருப்பாள். ஆனால் அவன் சந்தேகத்தின் பெயரிலோ அல்லது இவன் விரும்புகின்ற அந்த கட்டு தேகம் குலைந்தபின் நித்தம் நித்தம் கொடுமை செய்வான். சந்தேகத்தின் பேரிலும் பல்வேறு காரணங்களாலும் அவளை சித்ரவதை செய்வான். சொல்லினாலேயே சித்ரவதை செய்வான். அவள் வெளியே தெரியாமல் நொந்து சாவாள். அப்பேர்ப்பட்ட மூடத்தனமும் கடிய நெஞ்சும் உள்ள பாவிகளும் ஞானிகளின் பாதத்தைப் பற்றுவார்கள்.

ஒருவன் பாவம் செய்வதற்கு எந்த ஊருக்கும் போக வேண்டியதில்லை. பாவம் செய்கிற இடமே நமது வீடுதான். நமது மனைவி, பிள்ளைகள், தாய் தந்தை, நண்பர்கள், உடன் பிறந்தோர்கள் இவர்களிடம்தான் நாம் பாவம் செய்வோம். ஞானிகளெல்லாம் இதை உணர்ந்தவர்கள். தீவினை எப்படி நம்மை ஆள்கிறது? அது எப்படியெல்லாம் நம்மை வஞ்சிக்கிறது. எந்தெந்த வினைகள் மூலம் நமக்கு பாவம் சேர்கிறதென்பதையெல்லாம் ஞானிகள் அறிவார்கள்.

அங்கே தாய் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அவன் கண்டுகொள்ளாமல் சுகமாக தூங்குகிறான். ஆனால் ஞானிகளெல்லாம் தாய்மை உணர்வு மிக்கவர்கள்.

அள்ளி யிடுவ தரிசியோ தாய்தலைமேற்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் – மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு.
- மகான் பட்டினத்தார் - தாயாருக்கு தகனக் கிரியை செய்கையிற் பாடியது - கவி எண் 6.

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே எனவழைத்த வாய்க்கு.
- மகான் பட்டினத்தார் - தாயாருக்கு தகனக் கிரியை செய்கையிற் பாடியது - கவி எண் 5.

அரிசியோ நானிடுவேன் என்று சொன்னார். அதுதானே தாய்மை உணர்வு. அப்படி உள்ளவன் தானே ஞானியாக முடியும். அந்த உணர்வல்லவோ ஞானியாக்கும்.
எண்பது வயது கிழவி, திண்ணையிலிருந்து "அப்பா மகனே சிங்காரம்" என்று நடு இரவில் மகனை அழைக்கிறாள். "உனக்கு வேலையில்லையா தூங்கு" என்கிறான் மகன். இவன் மனிதனா ?

அரிசியோ நானிடுவேன் என்கிறார் மகான் பட்டினத்தார். என் தாய்க்கா அரிசி இடுவேன் என்றார். ஆக அவன் மனிதனா? இவர் மனிதனா?

மனிதனுக்கு வினை எப்படி சேர்கிறது? நல்வினை மிகுவதற்கு காரணம் அந்த மென்மையான அறிவு. தீவினை மிகுவதற்கு காரணம் அந்த கடிய மனது. இந்த கடிய மனது திருந்துவதற்காகத்தான் நாம் பூஜை செய்கிறோம். இந்த கருத்தை எதற்கு சொல்கிறோம் என்றால், உன்னிடம் இந்த கடிய மனம் எதையும் உணர முடியாத கரும்பாறை மனம், மூர்க்க மனம் இருக்க கூடாது என்பதற்காகத்தான் தவிர வேறொன்றுமில்லை.
"அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு , வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்” என்று சொல்வார் மகான் பட்டினத்தார்.

இறுதி காலத்தில் தாய்க்கு வாய்க்கரிசி போடுவதுண்டு. எதையெல்லாம் கேட்கிறானோ? அதையெல்லாம் கொடுப்பாள். தனக்கென எதுவும் வைத்து மகிழ மாட்டாள். அப்படிப்பட்ட தாய்க்கா நான் கடைசி நேரத்தில் அரிசியா போடுவேன் என்பார்.
"உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே எனவழைத்த வாய்க்கு அள்ளி யிடுவ தரிசியோ தாய்தலைமேற் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்" இதை நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்.

ஆக மனிதவர்க்கத்திடம் தாய்காட்டிய அன்பை உணரமுடியாத, பிறர் துன்பத்தை அறிய முடியாத கடிய மனம் இருக்கிறது. அதை மாற்றுவதற்காகத்தான் பேசியிருக்கிறேன்.

யோகத்தைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். யோகம் நொடிப்பொழுதில் காட்டக்கூடியது. இதை மகான் திருமூலர்,

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.
- திருமந்திரம் - சம்பிரதாயம் - கவி எண் 1778.

எனவே யோகத்தைப் பற்றி பிறகு பார்க்கலாம். மனித வர்க்கத்தை மாசுபடுத்தக் கூடிய, இந்த கடின மனத்தை மாற்றுவதற்காகத்தான் பேசுகின்றோம்.
மற்றவர்களுடைய துன்பத்தை உணர்கின்ற பரிபக்குவம் ஒருவனுக்கு வருமேயானால் அவனே கடவுள்.

அப்படி பிறர் துன்பத்தை உணர முடியாத நிலை வந்தால், அவன் மனிதன். பிறருடைய துன்பத்தைக் கண்டும் சிந்திக்க முடியாதவன் தான் மிருகம்.
நாம் சில பூஜா விதிகளைப் பற்றி வருகின்ற சித்ரா பௌர்ணமி அன்று சொல்லப்போகிறோம்.

திருவிளக்கில் தீபத்தை ஏற்றி வைத்து, அதன் முன் தட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, உள்ளங்கையில் தண்ணீர் விட்டு அந்த நீரை தட்டில் ஊற்றும்போது "அகத்தீஸ்வரா என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம். என்னுள் இருந்து எது எது குற்றமோ அதை உணர்த்து. அடியேன் உணர்ந்தால் மட்டும் போதாது, அதை நீக்குவதற்கும் அருள் செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும்.
ஆக இதைப்பற்றியெல்லாம் மக்களுக்கு சொல்ல வேண்டுமென்று மகான் அகத்தீசர் சொல்லியிருக்கிறார்.

01.05.1988 அன்று பூஜாவிதியைப் பற்றி அறிவிக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றும் ஆசான் அகத்தீசர் சொன்னார்.

ஆட்டை வெட்டுவான், ஆட்டுக் குட்டியை கடிப்பான். வெட்டுவது, கடிப்பது, குத்துவது பூஜா விதியாக இருந்தது. நான் ஒரு சிற்றூரில் தங்கியிருந்தேன். அகண்ட காவிரி பகுதியில் பச்சை பந்தல் போட்டிருந்தான். அங்கு பூஜை நடக்கிறது. பூசாரி கட்டிப் போட்ட கிடா பன்றியை ஒரு ஈட்டியால் குத்துகிறான். ஒவ்வொரு குத்துக்கும் ஒவ்வொரு முழம் சென்று வருகிறது. பன்றி கொடுமையான வேதனை தாங்காமல் சத்தமிடுகிறது.
அங்கே இருப்பவர்களுக்கு அந்த கொடிய சத்தத்தைக் கேட்டு அவர்களின் உள்ளத்தில் இரக்கம் வரவில்லை.

இன்னும் சிலபேர் ஆட்டுக்குட்டியை கடிப்பார்கள். இதை குட்டி கடிப்பது என்பார்கள். ஆக அவன் குத்துகிறான். இவன் கடிக்கிறான். இவர்களெல்லாம் ஞானம் என்றால், வீசை (கிலோ) என்ன விலை என்று கேட்பார்கள். ஆக இவையெல்லாம் சமுதாயத்தில் நடக்கின்ற பூஜைகள். இவனை இந்த பூஜையே நரகத்திற்கு தள்ளிவிடும். இந்த பூஜையை நீக்கி, நாம் ஒரு புதுமையான பூஜாவிதியை சொல்லப் போகிறோம்.

முன்பெல்லாம் மாவிளக்கு போடுவார்கள். பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் செய்வார்கள். அவரவர்கள் தரத்திற்கு ஏற்றாற்போல பூஜைகள் செய்கிறார்கள். இது ஒரு வகையான பூஜை. ஆனால் நாம் காட்டுகின்ற பூஜை புதுமையாக இருக்கும்.

என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம் என்று சொல்கிறோம். எது எது குற்றமோ, அதை உணர அருள் செய்ய வேண்டுகிறோம். உணர்ந்தால் மட்டும் போதாது. அதை நீக்கவும் அருள் செய்ய வேண்டுமென கேட்கிறோம்.
அது மட்டுமல்ல. என் அகமும் புறமும் இருந்து நான் உண்மை பொருளை உணரவும், அதை பின்பற்றவும், அடியேன் வாசியோடு வாசியாக கலந்து வாசிநிலை அறிய வேண்டுமென்றும் கேட்க வேண்டும். இப்படியெல்லாம் கேட்க வேண்டுமென்ற பூஜா விதியை நாங்கள் வைத்துள்ளோம்.

அதே சமயத்தில் நமக்கு புறதேகம், அகதேகம் என்ற இரண்டு வகையான உடம்பு உண்டு.
புறதேகம் - தூலதேகம், அகதேகம் - சூட்சுமதேகம்.
சூட்சும தேகத்தை நான் அறிய வேண்டும். சூட்சுமத்தை நான் அறிய விரும்புகிறேன் என்று சொன்னாலே நிச்சயமாக நாம் தூலத்தை அறியலாம். புற உடம்பைப் பற்றி அறியக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.
ஆக இப்படிப்பட்ட பூஜை நெறியை சொல்லப் போகிறோம். மகான் திருமூலதேவர் இந்தக் கருத்தை ,

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.
- திருமந்திரம் - சம்பிரதாயம் - கவி எண் 1778.

உதகம் என்றால் தண்ணீர். நாம் சொல்லுகின்ற இந்த கருத்தை மகான் திருமூலதேவர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். அப்படி சொன்ன பூஜை முறை, இன்று புதுமையாக தெரிகிறது என்றால், இந்த காலக்கட்டம் எவ்வளவு கடுமையாக இருக்கிறது.

ஆக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மகான் திருமூலர் தந்த பூஜாவிதி புதுமையாக இருக்கிறதென்று சொன்னால், அப்ப இடைக்காலத்தில் எந்த அளவிற்கு இந்த பூஜாவிதிகள் சமுதாயத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஆக குறிப்பிட்ட மக்கள் இந்த பூஜாவிதியை மறைத்து விட்டார்கள். நாம் அதை மீண்டும் வெளிக்கொணர வேண்டிய காலம் வந்து விட்டது. இனி வருகின்ற காலம் ஞானசித்தர் காலம். இப்ப பாடலை பார்ப்போம்.

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு - உதகம் என்றால் தண்ணீர். என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம் என்று நாம் சொன்ன கருத்தை மகான் திருமூலதேவரும் சொல்கிறார்.

ஆக இன்றுமுதல் உனக்கு ஞானம் உள்ளதென்று சுட்டிக்காட்டுவார்கள். தொடர்கின்ற வினையை தினம் பூஜை செய்து போக்கிக் கொள்வான். செடியாகிய தீமை தீர்ந்தது என்று சொல்வார்.
வினை என்பது வளரக்கூடியது. அந்த அடிவேரை அறுத்துவிடுவான். வினையை வளர்க்கக் கூடிய பயிரை அறுத்துவிடுவான்.
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து - இவன் தகுதியை ஆராய்ந்து பார்த்து நன்றாக சிந்தித்துப் பார்த்து அவனுடைய வருங்காலத்தைப் பார்த்து, நிகழ்காலத்தைப் பார்த்து, முன் ஜென்மம் அனைத்தையும் பார்த்து, கல்வியறிவைப் பார்த்து, சிந்தனையைப் பார்த்து அருள் செய்வார்கள்.
ஆக பார்த்து என்ற வார்த்தைக்கு இத்தனை பொருள் உண்டு.

நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக் - ஞானிகள் இவன் உள்ளம் உருக உருக பூஜிப்பதை சிறிதும் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் அப்படியே பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது நமக்குத் தெரியாது.

தாக்கையா மேல் வாசற்குள்ளே சென்று சாக்கிரத்திற் கண்மூடி சதாநித்தம் பாரு - இது நான்காம்படியைப் பற்றி பேசுவதாகும்.

தாக்கையா மேல்வாசற் குள்ளே சென்று
சாக்கிரத்திற் கண்மூடி சதாநித்தம் பாரு
நோக்கையா நோயெல்லாம் நிர்த்தூளியாகும்
நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும்
ஆக்கையா பொறிகளைந்து மடித்துத் தள்ளில்
ஆனந்த மதியமுர்தஞ் சிந்துஞ்சிந்தும்
வாக்கையா பேசாதே சமாதி மூட்டு
மைந்தனே பூசையெல்லாம் வழங்கும்பாரே.
- அகஸ்தியர் பூஜா விதி - கவி எண் 37.

இப்படிப்பட்ட கவியெல்லாம் நான் இதுவரை கூறியதில்லை. இன்றைக்கு பேச வேண்டிய காலக்கட்டம். அதனால் பேசுகிறோம். அந்த பாடலுக்குரிய விளக்கத்தைப் பார்ப்போம்.
தாக்கையா மேல்வாசற் குள்ளே சென்று - இடகலையும், வலகலையும் கீழ்நோக்கி செல்லும். ஞானிகள் சுவாசத்தை மேல்நோக்கி செலுத்துவார்கள்.

சாக்கிரத்திற் கண்மூடி சதாநித்தம் பாரு - சாக்கிரம் என்பது புருவமத்தி. ஒருவன் இந்த இடத்தை கண்மூடி உற்றுநோக்க முடியாது. அடிக்கடி சிந்தனை மாறும். இப்படி உள்ள நிலையையே அவஸ்தை என்று சொல்வார்கள்.
அடுத்து சொப்பன அவஸ்தை என்ற ஒன்று உண்டு. இதற்கு இடம் கண்டஸ்தானம். இங்கேயும் ஒருவன் கண்ணை ஒருநிலைப்படுத்தி பார்க்க முடியாது.

யோகிகள் என்ன செய்வார்கள்? இடகலையையும், பிங்கலையையும் ஒன்றுபடுத்தி ஊசி முனையளவு உள்ள பாதை வழியாக, புருவமத்தியில் செலுத்தி விடுவான். பின்பு உற்று நோக்குவான். தாக்கையா மேல்வாசற் குள்ளே சென்று, சில பேர் வெறும் பார்வை பார்ப்பார்கள். வெறும் பார்வை பார்க்கக் கூடாது. யோகிகள் மட்டும் ஏன் புருவமத்தியை பார்க்கிறார்கள்.

எந்த வாசலிலே வாசியை செலுத்தினார்களோ, அந்த வாசலை உற்று நோக்கி அந்த வாசியை மேல்நோக்கி கொண்டு வருகிறார்கள். வாசியை மேல் நோக்கி கொண்டு வரும்போது என்ன செய்வார்கள் என்பதை மகான் திருமூலர் சொல்வார்,

பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற யுள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
- திருமந்திரம் - விந்து ஜெயம் - போக சரவோட்டம் - கவி எண் 1937.

யோகி வாசியை செலுத்தி அந்த வாசலை உற்று நோக்கி, உற்று நோக்கி அனலை தட்டி எழுப்புவான். அப்படி எழுப்பும்போது நோக்கையா நோயெல்லாம் நிர்த்தூளியாகும் - உடம்பில் இருக்கும் நோயெல்லாம் தூள் தூளாகிவிடும். நிர்தூளி என்பதற்கு தூளாகும் என்று அர்த்தம்.

நோக்கையா நோயெல்லாம் நிர்த்தூளியாகும்
நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும்

யோகிகள் புருவமத்தியில் வாசியை செலுத்திவிட்டு புருவமத்தியை பார்ப்பார்கள். இதுதான் புருவமத்தியை பார்க்கின்ற மக்களின் இரகசியம். சிலர் வெறும் புருவமத்தியை பார்க்கிறார்கள். இவர்களெல்லாம் கனவில் லட்டு, ஜிலேபி சாப்பிடுவது போன்றதாகும்.

கனவில் லட்டு, ஜிலேபி, முக்கனி வைத்து சாப்பிட்டால் வயிறு நிரம்புமா? நிரம்பாது. எனவே மற்றவர்கள் புருவமத்தியை பார்ப்பது பயனற்ற செயல். ஆனால் யோகிகளின் பார்வையை மகான் திருமூலர்,

அத்தாற் பிறவி அவர் இரு கண்களை
வைத்தார் நுனி மூக்கின் புருவத்திடை
நித்தாரமங்கே நினைக்க வல்லார்க்கு
எத்தாலுஞ் சாவில்லை இறை அவனாமே.

யோகிகள் வாசி செலுத்திய வாசலை உற்று நோக்கி, அந்தக் காற்றை மேலே நோக்குவார்கள். அதுதான் பிறவித் துன்பத்தை ஒழிப்பதாகும். அப்படி பார்ப்பதைத்தான் "நோக்கையா நோயெல்லாம் நிர்த் தூளியாகும் நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும்” என்று சொல்வார்.

ஆனால் இவன் ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து பார்ப்பான். அதுவே அவனுக்கு மரணத்தை உண்டாக்கும். அப்ப நோகாமல் பார்த்துவர கண் திறக்கும் என்பார்.

யோகிகள் அத்தனை பேரும் இந்த தத்துவத்தை உணர்ந்தவர்கள். இவர்கள் நிஷ்டை மேற்கொண்டிருப்பார்கள். கருணைக்கொண்டு இரண்டு கண்களாலும் கூர்பார்வை செலுத்துவார்கள். அவ்வாறு கூர்பார்வை செலுத்தும்போது ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும், ஞானிகள் நிறுத்து என்று கட்டளையிடுவார்கள்.
அப்படி அந்த கட்டளையை மீறினால் என்ன ஆகும்? உடம்பில் அக்கினி மிகுந்து உயிர் போய்விடும். உடம்பில் அக்கினி குறைந்தாலும் ஆபத்து. இப்படி ஒரு இரகசியம் இருக்கிறது. இந்த இரகசியம் பாலை காய்ச்சி எடுப்பது போல் உள்ளது.

ஒருவன் பாலைக் காய்ச்சி எடுக்கும்போது, கணக்காக அனல் இருந்தால் பால் காயும், கணக்கு மீறினால் பால் பொங்கும், கணக்கு குறைந்தால் பால் காயாது.

இதேபோன்று யோகிகள் என்ன செய்கிறார்கள்? ஒரு குறிப்பிட்ட அளவு அக்கினியை சரியாக வைத்திருப்பார்கள். அக்கினி குறைந்தாலும் ஆபத்து, கூடினாலும் ஆபத்து. இதை,

நோக்கையா நோயெல்லாம் நிர்த்தூளியாகும்
நோகாமற் பார்த்துவரக் கண் திறக்கும்
ஆக்கையா பொறிகளைந்து மடித்துத் தள்ளில்
ஆனந்த மதியமுர்தஞ் சிந்துஞ்சிந்தும்
வாக்கையா பேசாதே சமாதி மூட்டு
மைந்தனே பூசையெல்லாம் வழங்கும்பாரே.

இப்ப யோகிகள் ஓராண்டு மௌனமாக இருப்பார்கள், பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும். இதுதான் மிகமிக கடுமையான அடயோகம். இந்த காலக்கட்டம் நமக்கும் வரலாம், வராமலும் போகலாம் எனக்குத் தெரியாது. யோகிகள் வாசி செலுத்திய வாசலை உற்று நோக்கி அனலை எழுப்புகின்றார்கள். அப்படி எழுப்புவதால் மதியமுர்தம் சிந்தும் என்பார். மதியமுர்தம் என்றால் அமிழ்தபானம்.

வாசல் திறக்கும், அமிழ்தபானம் சிந்தும். இதைத்தான் மகான் திருமூலர் நொடியில், நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக் - இதற்கு முன்பு இந்த உணர்வே வராது. இதை உணர்வு என்று சொல்லாமல் நுண்ணுணர்வு என்றார். நுணுக்கமான நுண்ணுணர்வுகள் வேண்டும்.

இந்த உணர்வுகள், ஞானிகளை பூஜித்தால்தான் வரும். இந்த உணர்வை நான் பெற்றிருக்கிறேன். நீங்களும் பெற வேண்டுமென்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன். இந்த கவியை எப்போதும் நான் பயன்படுத்த மாட்டேன். இந்த கவி சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று சொல்லப்பட்ட ஞானத்திலுள்ள மக்களுக்கு சொல்வது. என்னுடைய சீடர்களிலேயே நுணுக்கமான சீடர்கள் யாரென்று ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு இரகசியமாய் சொல்ல வேண்டிய கருத்து.

இந்த கூட்டத்தில் யாரோ புண்ணியம் செய்திருக்கலாம், அதனால் இந்த கவியைப் பற்றி பேசியிருக்கிறோம். இந்த கவியை கேட்டாலே புண்ணியம். இந்த கவியை கேட்டவர்க்கு அடுத்த பிறப்பில் இந்த கவியைப் பற்றி சிந்திக்கும் திறமை வரும். இந்த கவியெல்லாம் மிகவும் அபூர்வமானது, வெறும் கவியல்ல அருட்கவி.

அடுத்து இது கொடிய பிறவியென்றார். இந்த பிறவியை ஒவ்வொருவரும் இனிய பிறவியென்று நினைக்க வேண்டாம். இது கொடிய பிறவி. இதை மகான் திருமூலதேவர் கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே என்றார்.
அதற்கு நாமென்ன செய்ய வேண்டும். நமக்கு பிறப்பற்று போக வேண்டும். பிறப்பற்று போக மனம் மிருதுவாக வேண்டும். அதற்காகத்தான் நாம் பூஜை செய்ய வேண்டும்.

ஒரு பெருநகரத்தில் ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தேன். பக்கத்து வீட்டில் வேலையாள் ஒருவன் இருந்தான். அவன் காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை தண்ணீர் எடுத்தான். பிள்ளைகளின் துணிமணி துவைப்பதிலிருந்து, சாக்கடை கழுவது வரை எல்லா வேலைகளும் செய்தான். நான் தை மாதம் அந்த வீட்டில் தங்கியிருந்தேன். தை மாத குளிரில் இடுப்பில் ஒரு முழத் துண்டுடன் அவர்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். தன் உடம்பையே அவர்களுக்காக உருக்கி வைத்திருக்கிறான். அதைப் பார்க்கும்போது என்னடா இப்படி ஒரு ஜென்மம் நீ எடுத்தாய். உனக்கு உதவி செய்ய முடியவில்லையே என என்னையே நான் நொந்து கொண்டேன்.

ஆனால் அந்த வீட்டுக்காரன், எதைப்பற்றியும் எண்ணாமல் டேய் எந்திரி தண்ணீர் தெளிக்கணும் என்றான். இவனும் வயிற்றுப் பிழைப்பிற்காக அடுத்த நாளும் காலை பத்துமணி வரை வேலை செய்கிறான். ஆக இந்த கொடிய உணர்வு ஒழிய வேண்டும். இந்த உணர்வு மனித வர்க்கத்திற்கு வரக்கூடாது. சிங்கம், புலி, கரடி, காண்டாமிருகம் போன்ற மிருகத்திற்குத்தான் வரும். மனிதனுக்கு வரக்கூடாது.

கனிவு சிந்தை வரவேண்டும் என்பதற்காகத்தான் பூஜை செய்ய வேண்டும். அது இந்த துறைக்கு உள்ள இயல்பு. இன்று பேசப்பட்ட கருத்துக்கள் உங்கள் உள்ளத்தை தொட்டிருக்கும். எப்படி இருந்தாலும் இது ஞானக்கல்வி. இந்த பாடல்கள் ஞானப்பாடல்கள். நாம் பிறவித் துன்பத்தை நீக்குவதற்கு பூஜை செய்ய வேண்டும். மனம் மென்மையாவதற்கு பூஜை செய்ய வேண்டும்.

தொடர்ந்து பூஜை செய்தால் பிறவித் துன்பத்தை ஒழிக்கலாம் என்ற கருத்தை மையக் கருத்தாக கொண்டு எனக்கு தெரிந்த சில கருத்துக்களை திருமந்திரத்திலிருந்தும் திருக்குறளிலிருந்தும் விளக்கம் சொல்லியிருக்கிறேன். அதில் குறையும் இருக்கலாம், நிறையும் இருக்கலாம். கற்றுணர்ந்த பெரியோர்கள் குறையை நீக்கி நிறையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.


திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

21. நன்றி மறவேல்

உலகில் தோன்றிய உயிர்களில், மற்ற உயிர்களுக்கு இல்லாத ஒரு தனிப்பண்பு மனித சமுதாயத்திற்கு உண்டு. அதுதான் தன் இனத்தின் பிற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு அவ்வுயிர்கள் கேட்காமலேயே தானே முன்னின்று அவ்வுயிர்படும் துன்பத்தைக் களைய உதவி செய்ய முற்படுகின்ற, உதவி மனப்பான்மையாகிய உயர்ந்த பண்பாகும். இப்படி பிற உயிர் துன்பத்தை களைவது என்பது மற்றைய உயிர்களிடம் இல்லாதபடியால் மனிதன் இவ்வுலக உயிர்களில் சிறந்தவனாக கருதப்படுகிறான். பிற உயிர்கள் அவை அவை வாழ்வதற்காக போராடியும், தேடியும், அலைந்தும் தனக்குத் தேவையானவற்றை தாமே செய்து கொள்கின்றன அல்லது கூட்டாக செய்து கொள்கின்றன. அப்படி இயலாதபோது பிற உயிரினங்கள் அவற்றின் தேவைக்காக மற்ற உயிரினங்கள் சிரமம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் மனிதனோ எல்லோரும் கூடிய ஒரு கூட்டு சமுதாய வாழ்க்கை முறையை உண்டாக்கி அச்சமுதாய வாழ்வின் மூலம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தும் வலிமை உடையோர் எளியோரை பராமரித்தும் வாழக்கூடிய ஒரு தனித்தன்மையான உணர்வுகளுடன் வாழ்கிறான்.

ஒரு கிராமமோ, நகரமோ அங்குள்ள மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து சார்ந்து வாழ்கின்ற ஒரு கூட்டு சமுதாய வாழ்க்கை அமைப்பில் உள்ளது. இதில் ஒருவர் படும் துன்பத்தை பார்த்து தானாகவே துன்பப்படுவர், கேட்காமலேயே உதவி செய்து அவரது கஷ்டத்தை போக்கும் மனப்பான்மை உள்ளவர்கள் உள்ளனர். அவர்கள் மிக உயர்ந்த பண்பாளராவார். ஒரு சிலர் துன்பப்படுகிறேன் உதவி செய் என்று கேட்டால், உதவி செய்வார்கள். அவரும் ஒரு வகையில் பாராட்டப்பட வேண்டியவர்தான். இப்படி ஒருவர் நாம் கேட்காமலேயே உதவி செய்த அந்த நன்றியை நாம் மறக்கக்கூடாது என்பது நன்றி மறவாமை ஆகும்.

சென்னையில் இருந்து ஆலயச் சுற்றுலா செல்ல, ஒரு பெரும் செல்வ வளமிக்க குடும்பம் முடிவு செய்து, தம் குடும்பத்தினரோடு வாகனத்தில் சுற்றுலா சென்றனர். அவ்வாறு சுற்றுலா செல்கையில் அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலை அடைந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அவ்வூரில் உள்ள உணவகத்தில் உணவருந்தினர். அப்படி உணவருந்தி விட்டு பில்லிற்கு பணம் கொடுக்க ஹோட்டலில் உள்ள முதலாளியிடம் அந்த செல்வந்தர் சென்றார். அவரது சட்டையில் கையை விட்டு பணத்தை தேடினார். ஆனால் பணம் இல்லை. யாரோ அவரது பர்ஸை திருடிவிட்டனர். பில்லிற்கு பணம் கட்ட முடியாமல் திகைத்தனர். அக்குடும்பத்தினர் என்ன செய்வது? வெளியூரில் வந்து இப்படி நடந்து விட்டதே! யாரைத் தெரியும்! நாம், பணம் பறிபோய்விட்டது என்று சொன்னால் யாரும் நம்புவார்களா? என்றெல்லாம் எண்ணி அவர் தடுமாறினார். இதைப் பார்த்த அவரது மனைவி கடைக்காரரிடம் ஐயா பணம் திருடு போய்விட்டது. எங்களிடம் பணம் இல்லை. எனது தோட்டினை வைத்துக் கொள்ளுங்கள் என தனது காதிலுள்ள தங்க தோட்டினை அவரிடம் தந்தார். ஆனால் கடைக்காரனோ அதெல்லாம் முடியாது. எனக்கு பணம்தான் வேண்டும். என்னை ஏமாற்றாதே! என மறுத்துவிட்டார். இப்படி நடந்து கொண்டிருந்த காட்சியை இவர்களைப் போலவே மதுரையில் இருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள் அதே ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் இதை பார்த்துக் கொண்டிருந்தார். சென்னையில் இருந்து வந்தவரது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு இவர் தானே வலிய சென்று அந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா அவரது பில் தொகை எவ்வளவு? அதை நானே தந்து விடுகிறேன். அவரை அவமானப்படுத்தாதீர்கள். அவரை விட்டு விடுங்களென கூறி முன்பின் தெரியாத அவர்பால் அன்பு கொண்டு அவருக்காக இவர் பில்லைக் கட்டி அவரை தக்க சமயத்தில் காப்பாற்றி அவரது மானத்தை காப்பாற்றி அனுப்பி வைத்தார்.

சென்னையிலிருந்து வந்த அந்த குடும்பத்தினர் அவர் செய்த பிரதிபலன் பாராத அந்த உதவியை எண்ணி மதுரை நபரது விலாசம் முகவரி போன்றவற்றை வாங்கிக்கொண்டு தங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஊருக்கு சென்ற உடனே பணம் அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு சென்னை சென்றனர். சென்னை சென்ற உடன் தனக்கு உள்ள தொகையில் சுமார் பத்து இலட்சம் பெறுமானமுள்ள தொகையை எடுத்துக் கொண்டு அந்த உதவி செய்த நபரின் விலாசத்தை தேடி கண்டுபிடித்து அந்த தொகையை உதவி செய்தவரிடம் கொடுத்தார். உதவி செய்தவரோ திகைத்துவிட்டார். என்ன ஐயா? தாங்கள் எதற்காக இந்த பெரிய தொகையை என்னிடம் கொடுக்கிறீர்கள் எனக் கூறி தடுமாறினார். சென்னையில் இருந்து வந்த செல்வந்தரோ , தக்க சமயத்தில் யாரென்றும் தெரியாத ஒருவர், எனது தன்மை என்னவென்றும் யோசிக்காமல் என்னையும் எனது குடும்பத்தினரையும் பொது இடத்தில் மானம் போகாமல் தக்க சமயத்தில் காப்பாற்றினீர்கள். தாங்கள் தக்க சமயத்தில் செய்த, அந்த உதவிக்கு முன் நான் கொடுக்கும் தொகை கடுகளவாகும் எனக்கூறி அந்த பத்து இலட்சத்தையும் மதுரை நபருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.

ஒரு கிராமத்தில் விவசாயக் குடும்பம் வசித்து வந்தது. அந்த குடும்பம் வசித்துவந்த பக்கத்து வீட்டுக்காரர் , விளை நிலங்களைக் கொண்ட ஒரு செல்வந்தர். ஒரு சமயம் அந்த விவசாய குடும்பத்தின் தலைவி கர்ப்பமுற்று இருந்தாள். அவளது குழந்தை பேறுகாலம் ஒரு வாரத்தில் என மருத்துவர்கள் கூறினார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு முக்கிய வேலையாக அந்த குடும்பத்தலைவன் மனைவியை தனியே விட்டுவிட்டு வெளியூர் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டதால் வெளியூர் சென்றிருந்தான். அந்த சமயத்தில் அந்த பெண்மணிக்கு கடுமையான பிரசவவலி ஏற்பட்டு துடித்துப் போய்விட்டாள். இதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் அடடா! இந்த பெண் இவ்வளவு கஷ்டப்படுகிறாளே உதவ வேண்டுமென எண்ணி செல்வந்தரின் மனைவியும் அவரும் ஒன்றும் சிந்திக்காமல் தங்களுடைய காரை எடுத்துக்கொண்டு வலியால் துடித்த அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள நகரத்திற்கு சென்று தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்து நலமாக பிரசவிக்க எல்லா உதவிகளும் செய்து கூடவே இருந்து உதவி செய்து தாயும் சேயும் நலமாக இருக்க உதவி செய்தனர். காலையில் அந்த விவசாயிக்கு தகவல் அனுப்பி வரசொல்லி அவன் வசம் தாயையும் சேயையும் ஒப்படைத்தனர். மருத்துவர்கள் தக்க சமயத்தில் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்த்தனர். இது தலைப்பிரசவம் எனவே தக்க சமயத்தில் வராவிட்டால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு ஏதாவது ஒரு உயிரைத்தான் காப்பாற்றியிருக்க முடியும். பெண்ணை கூட்டிவந்து சேர்த்தவர்க்கு நன்றி சொல்லுங்கள் என மருத்துவர் கூறினார். அவனும் அவர்களை சந்தித்து தனது நன்றிகளை சொன்னான்.

சில காலம் சென்றபின் செல்வந்தரது நிலங்களை பராமரித்துவந்த குத்தகைக்காரர் நிலங்களை பராமரிக்காமல் விட்டுவிட்டு சென்றதால் அவரது விவசாய நிலங்கள் கவனிப்பாரற்று குடும்பத்திற்கு வருவாய் குறைய ஆரம்பித்தது. அதனால் அந்த குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. இதைக் கண்ட விவசாய குடும்பம் அடடா! நாம் கேட்காமலேயே உதவி செய்தவர் குடும்பத்திற்கு ஒரு கஷ்டம் என்றால், நாம் சும்மா இருப்பதா என எண்ணி செல்வந்தரிடம் சென்று தோட்டத்தை நான் பார்த்து சரி செய்து நல்லபடி விவசாயம் செய்து தருகிறேன். தாங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் எனக்கூறி தானும் தனது குடும்பத்தாருடனும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவரது நிலத்தில் பாடுபட்டு ஏற்பட இருந்த இழப்பை சரிசெய்ததுடன் கூடுதல் மகசூலையும் பெற்று தந்தான். செல்வந்தர் இந்த நன்றி மறவா செயலை எண்ணி அவனையே தனது நிலங்களை காலம் உள்ளவரை பார்த்துக் கொள்ள சொன்னார். அதன்பின் இருவரும் நண்பர்களாகி ஒரு தாய் பிள்ளைகள் போல ஆனார்கள். ஒருவன் காலத்தால் செய்த உதவி சிறிதாய் இருப்பினும், உதவி செய்யப்பட்ட காலத்தை எண்ணி என்றும் மறக்கக்கூடாது.

அதேபோல மற்றொரு கிராமத்தில் இரு இனத்தவர்களிடையே இனக்கலவரம் மூண்டது. மேல் இனத்தைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் பகைக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு பெரும் இழப்புகள் ஏற்பட ஏதுவாயிற்று. அப்படி கலவரத்தின் போது ஒரு இரவு, மேல் இனத்தின் தலைவர் தனியாக தாழ்த்தப்பட்ட இனத்தவர் வசிக்கும்

பகுதிக்கு அருகில் உள்ள சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட தாழ்ந்த இனத்தை சேர்ந்தவர்கள் அவரை கண்டவுடன் பகை கொண்டு அவனை விடாதே பிடி! கொல்! என்று கூச்சலிட்டு கொண்டே தாக்க முற்பட்டனர். தனியாக உள்ள தலைவரோ, என்ன செய்வதென்று அறியாமல் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து ஓடி ஒரு வீட்டில் ஒளிந்து கொண்டார். அந்த வீட்டில் உள்ளவன், அவரது பயத்தைப் பார்த்து மிகவும் வருந்தினான். தலைவரைப் பார்த்து பயப்படாதீர்கள் தங்களுக்கு எந்த இடையூறும் வராது. நான் காப்பாற்றுகிறேன். இங்கேயே இருங்கள். அமைதி ஏற்பட்ட உடன் வீட்டிற்கு செல்லுங்கள். நான் பாதுகாப்பாய் இருப்பேனென பலவாறு ஆறுதல் கூறி அவரது பயத்தை போக்கினான். அதே சமயம் துரத்தி வந்தவர்கள் அவனது வீட்டை நோக்கி நெருங்கி, எங்கே இந்த பக்கம் தலைவர் ஓடி வந்தார், உன் வீட்டில்தான் இருக்க வேண்டும். வேறு எங்கும் செல்ல வாய்ப்பில்லை. யாரேனும் இருந்தால் வெளியே அனுப்பு , இல்லையென்றால் நாங்கள் சோதனை செய்ய நேரிடும் என்றார்கள். அவர்களது வெறிச்செயலைப் பார்த்து, ஐயா இங்கே யாரும் இல்லை. குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை அம்மை போட்டுள்ளது. யாரும் உள்ளே வரவேண்டாம். தயவு செய்து எல்லோரும் வெளியே சென்றுவிடுங்கள் என பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் சென்றுவிட்டனர். பின்னர் சந்தடிகள் ஓய்ந்த பின் வெகுநேரம் சென்று தலைவரை தனது சைக்கிளிலேயே பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு சென்று விட்டான். மரணபயத்திலிருந்த தலைவர் உள்ளம் தெளிந்து, தனது இனத்தாரைக் கூட்டி எல்லோரும் ஒரு தாய் மக்கள், நமக்குள் பாகுபாடு வேண்டாம். இதனால் உயிர்கள் பலியாகின்றன. எனவே அனைவரும் பகையை மறந்து நட்பாகி விடுவோம் என பலவிதமாக அறிவுரைகள் சொல்லி அதன்பின் உயர் இனமும், தாழ்ந்த இனமும் என்ற பாகுபாடுகள் நீங்கிய கிராமமாக அக்கிராமத்தை மாற்றினார் தலைவர். இதனால் ஏற்பட இருந்த பெரு இனக்கலவரம் தடுக்கப்பட்டு பல உயிர்கள் பலியாவதும் தடுக்கப்பட்டது. அதன்பின் ஒரு சமயம் அந்த காப்பாற்றியவரது பிள்ளை படிக்க வசதி இல்லாமல் மேற்படிப்புக்கு செல்ல முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்ட தலைவர் அந்த பையனுடைய அனைத்து படிப்பு செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு அவனை தனது மகன் போல பார்த்து வேலைவாங்கிக் கொடுத்து எல்லா உதவிகளும் செய்து அக்குடும்பத்தையே ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார். இப்படி தக்க சமயத்தில் செய்த உதவியை தலைவர் மறவாமல் தனக்கு உதவி செய்ததற்கு உதவி செய்தார்.

ஒரு சிறிய நகரத்தில் உள்ள சாலையில் ஒரு பன்னிரெண்டு பதிமூன்று வயது பையன் ஆர்வத்தின் காரணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் சரியாக ஓட்ட தெரியாமல் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் அப்படி ஓட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென சாலை ஓரத்தில் இருந்த ஒரு வீட்டிலிருந்த ஒரு சிறு குழந்தை சாலையின் நடுவே ஓடி வந்துவிட்டது. வண்டியை ஓட்டிய சிறுவனோ திடீரென இப்படி குழந்தை ஓடி வந்ததால் பதட்டமடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி அக்குழந்தை மேல் வாகனத்தை மோதிவிடுவது போல் ஓட்டத்துவங்கினான். இந்த சூழ்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஐயோ! குழந்தை என்று தன்னைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். நல்ல வேளை வாகனம் குழந்தை மேல் மோதாமல் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைப் பார்த்து வீட்டிலிருந்து ஓடி வந்த அந்த குழந்தையின் தாய் தனது குழந்தையைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணை வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்று அவளை சாப்பிட வைத்து பின் தனது கழுத்திலிருந்த ஐந்துபவுன் தங்க சங்கிலியை அந்த பெண்ணின் கழுத்தில் போட்டு விட்டாள். தக்க சமயத்தில் எனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய உனக்கு எவ்வளவு உதவி செய்தாலும் தகும். என்னால் முடிந்ததை தருகிறேன் எனக்கூறி அவளை வாழ்த்தி அனுப்பினாள்.

இப்படி அநேகம் அநேகம் உதாரணம் சொல்லலாம். ஒருவர் நமக்கு செய்த உதவிக்கு உடனேயோ அல்லது சந்தர்ப்பம் ஏற்படும் போதோ, எப்படி நம்மை கேட்காமலே தானே முன் வந்து உதவி செய்தார்களோ, அதே போல் உதவி செய்தவர்கள் கேட்காமலேயே அவரது துன்பத்தை உணர்ந்து நாமாகவே முன் சென்று உதவி செய்து நன்றி மறவாத வாழ்வை வாழ்ந்தால் நாமும் நலம் பெறலாம். அதை விட்டுவிட்டு ஒருவன் செய்த உதவியை மறந்து நன்றி மறத்தல் ஆகிய செயலை ஒருவன் செய்தால் அவன் எத்தகைய சூழ்நிலைக்கு ஆளாவான் அவன் படும் துன்பங்கள் என்னென்ன என்பதை மகான் திருவள்ளுவபெருமான் தெளிவுபட தமது திருக்குறளில் செய்ந்நன்றி அறிதல் என்ற தனி அதிகாரத்தில் கூறியுள்ளார்கள்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment